May 2026

 



மே  11 தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில், 180 ஞாயிறுப் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கான வேதாகமத் தேர்வுகளும் நடத்தப்பட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்படியாக பரிசுகளும் வழங்கப்பட்டன. பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அநேக கிராமங்களில் ஞாயிறுப் பள்ளிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம். 

மே  12 ஏப்ரல் 11 அன்று தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்ற எட்டு மணி நேர ஊழியர் குடும்ப உபவாசக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்.  சகோதரி எலிசபெத் குழுவினர் (சென்னை) ஜெபக்குறிப்புகளைக் கூறி ஊழியர்களை ஜெபத்தில் வழிநடத்த, சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும்  மற்றும் காப்பகங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 13 சமஸ்திபூர் பணித்தளத்தில் ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 55 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஸ்டீபன் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், குடும்பத்தினரை கிறிஸ்துவண்டை நடத்தும் கருவிகளாக மாறவும் ஜெபிப்போம். 

மே  14 பர்சா பணித்தளத்தில் ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற ஒருநாள் வேதாகமப் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சி வகுப்புகளில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சுனில் ஆகியோர் வேதாகமத்திலிருந்து பல்வேறு சத்தியங்களைக் கற்றுக்கொடுத்தனர்; இப்பயிற்சி வகுப்பில் 120 பேர் பங்கேற்றனர். விசுவாசிகள் வேத அறிவில் வளரவும், வசனத்திற்கு தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கவும், விசுவாசிகளின் உறவினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

மே 15 கியோட்டி ரன்வே மற்றும் தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் கான்கிரீட் பணிகளுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.