July 2026



ஜூலை 11 தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் எழுப்புதல் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சென்னை ஓசன்னா ஊழியத்தைச் சேர்ந்த போதகர் தாமஸ் சாம் கிருபாகரன் மற்றும் போதகரின் துணைவியார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களுக்காக ஜெபித்தனர். அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக வாழவும், ஊழியம் செய்யவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இக்கூட்டங்களில் பங்கேற்ற வாலிபரின் வாழ்க்கையில் கிறிஸ்து வெளிப்படவும், சமுதாயத்தில் இவர்கள் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.

ஜூலை 12  தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், 'Never give up" என்ற கருப்பொருளின் கீழ் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியம் நடைபெற்றது. வேதாகமப் பாடங்கள், பாடல்கள், கதைகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுடன் கிறிஸ்துவின் அன்பு சிறுவர் சிறுமியரிடையே ஆழமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 800 சிறுவர் சிறுமியர் இவ்வூழியத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற்றனர். இறுதிநாள் விழாவின்போது மாணவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்கள் மூலமாக அநேக சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்படவும், சிறுவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 13  ஜுன் 2 அன்று பக்தியார்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 68 பேர் பங்கேற்றனர். தேவ செய்தியுடன், குடும்பங்களில் பெண்களின் பங்கு குறித்தும், உறவினர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் ஆலயம் கட்டப்படுவதற்கான நிலங்கள் விரைவில் வாங்கப்படவும், பணித்தள விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் உயரவும் ஜெபிப்போம். 

ஜூலை 14 ஜுன் 19 அன்று தெபோரா வேதாகமக் கல்லூரியின் சான்றளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. சுரேஷ் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

ஜூலை 15 கியோட்டி ரன்வே பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகளுக்காகவும், தற்போது நடைபெற்றுவரும் கான்கிரீட் பணிகள் எவ்விதத் தடையுமின்றி விரைவாக நடைபெறவும் ஜெபிப்போம். மேலும், இப்பகுதியில் செயல்பட்டுவரும் இருளின் சக்திகள் மாறவும், சுவிசேஷத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு, தேவனுடைய ராஜ்யம் வல்லமையுடன் கட்டியெழுப்பப்படவும், அநேகர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறவும் ஜெபிப்போம்.